எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (20.09.2012) காலை 10 மணிக்கு மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் மதுரை பெருமாள் கோவில் அருகே பிரின்ஸ் மஹாலில் நடைபெற்றது. துவக்கமாக அனைவரையும் மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா அவர்கள் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, செயலாளர்கள் செய்யது இபுராகிம், அப்துல் சத்தார், செய்யதலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவரின் தலைமையுரைக்குப் பின் கட்சி வளர்ச்சி பற்றி பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இறுதியாக மாநில பொதுச் செயலாளர் முஹம்மது முபாரக்கின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். செயற்குழுவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் :
1. மத்திய அரசு அண்மையில் டீசல் விலையை ரூ5 உயர்த்தியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். அத்தியாவசிய பொருட்கள் விலை தாறுமாறாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாகன வாடகைகளும் அதிகமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு சொல்லும் சாக்கு போக்குகள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. எனவே அரசு டீசல் விலை உயர்வை உடனடியாக முற்றிலும் திரும்பப் பெறுமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
2. மத்திய அரசு சமீபத்திய தனது அறிவிப்பில் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ஆறு சமையல் எரிவாயு உருளைகள் மாத்திரமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பிற்கும், சிரமத்திற்கும் ஆளாவர். மத்திய அரசு இந்த முடிவை திரும்பப் பெறுவதோடு மாதம் ஒரு சிலிண்டர் கிடைக்க மத்திய அரசு வகை செய்ய இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
3. தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் இரு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணத்தை வசூல் செய்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் சிரமத்தை அளிக்கிறது. காரணம் இரு மாதம் எனும்போது தொகை அதிகமாகி வருகிறது. மாதம் ஒருமுறை என்றால் சிறிய தொகையை செலுத்துவது இலகுவாக அமையும். எனவே மின் கட்டணம் செலுத்துவதை மாதம் ஒருமுறை என நிர்ணயிக்குமாறு தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
4. சில்லறை வர்த்தகத்தில் 51% அன்னிய முதலீட்டிற்கு அனுமதி என்ற மத்திய அரசின் அறிவிப்பை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. உள்நாட்டு வியாபாரிகளை பெரிதாக பாதிக்கும் தேச நலனுக்கு எதிரான இம்முடிவை கைவிடுமாறு மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
5. கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்குவதற்காக தமிழக காவல்துறை மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளை இச்செயற்குழு கண்டிக்கிறது. சொந்த நாட்டு மக்களை தீவிரவாதிகளாக சித்தரித்து முப்படைகளை ஏவி மிரட்டுவது ஏற்க முடியாதது. காவல்துறை கூடன்குளம் சுற்றியுள்ள மீனவ கிராமங்கள் மீதான முற்றுகையையும், அடக்குமுறைகளையும் கைவிட வேண்டும். கூடன்குளம் அணுஉலைக்கெதிரான போராட்டக்காரர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று கூடன்குளம் அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் முயற்சியை கைவிட வேண்டும். போராட்டக்காரர்களுடன் நிபந்தனையின்றி மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்தை நடத்த வேண்டும் என இச்செயற்குழு கோருகிறது.
6. நபிகள் நாயகம் முஹம்மது நபியை தவறாக சித்தரித்து திரைப்பட முன்னொளி காட்சிகளை தயாரித்து வெளியிட்ட அமெரிக்கர்களையும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காததோடு அப்படத்தை தடை செய்யாத அமெரிக்க அரசை இச்செயற்குழு கண்டிக்கிறது. உலக அமைதியை குலைக்கும் இச்செயலுக்கு எதிராக அமெரிக்காவிடம் இந்தியா தனது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக